அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம்: அங்கஜன் மறுப்பு!
In இலங்கை October 22, 2018 4:01 pm GMT 0 Comments 1652 by : Ravivarman

அம்மாச்சி உணவகத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்போவதாக எந்த இடத்திலும் நான் கூறவில்லை என பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“கடந்த 21/10/2018 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் நான் எந்த ஒரு இடத்திலும் இருக்கின்ற அம்மாச்சியினுடைய பெயரினை மாற்றம் செய்யப்போவதாக சொல்லவில்லை.
இந்த ஊடக சந்திப்பில் எனது கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை அல்லது தெளிவாக விளங்கி கொள்ளவில்லை என்றே கருதுகின்றேன்.
மாகாண சபை முடிந்ததும் அம்மாச்சியை அழிக்கும் திட்டம் எம்மிடம் இல்லை இது மத்திய அரசின் திட்டம் என்பதனையே நான் கூறுகின்றேன்.
அதாவது அம்மாச்சி உணவகம் என்பது வட.மாகாண சபைக்குரிய திட்டம் இல்லை இது முற்று முழுதாக மத்திய அரசினுடைய திட்டம். இதனை மாகாண அரசு மாகாண அரசினுடைய திட்டம் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர். இது எமக்கான ஒரு அவமானம் இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன. இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை. ஆனால் எமது பிரதேசத்தில் அமையும் போது அது தமிழில், தமிழ் பாரம்பரியத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே தமிழர் ஒவ்வொருவரினதும் விருப்பமாகும்.
அதுவே எனது எதிர்பார்ப்பு இதனை தான் நான் கூற வந்தேன் எனக்கு மத்திய அரசினுடைய திட்டத்தினையோ அல்லது மாகாண அரசினுடைய திட்டத்தினையோ எனது திட்டம் என மார் தட்டிக்கொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை.
அத்துடன் எப்பொழுதும் எனக்கு மாகாண அரசின் அதிகாரத்தை குறைக்கும் எண்ணமோ அல்லது மத்திய அரசிற்கு அதிகரித்து கொடுக்கும் எண்ணமோ என்னிடம் இல்லை” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.