இந்தியா டெஸ்ட்: மூன்றாம்நாள் ஆட்ட முடிவில் அவுஸ்ரேலியா 103/2

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா அணி 197 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
ஆட்டநேர முடிவில் மாரன்ஸ் லபுஸ்சேகன் 47 ஓட்டங்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 29 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
சிட்னி மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 91 ஓட்டங்களையும் வில் புகோவ்ஸ்கி 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுப்மான் கில் மற்றும் புஜாரா ஆகியோர் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹெசில்வுட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 94 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்போது டேவிட் வோர்னர் 13 ஓட்டங்களுடனும் வில் புகோவ்ஸ்கி 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை அவுஸ்ரேலியா அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.