இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றம்- சில பகுதிகள் நீரில் மூழ்கின!

கிளிநொச்சி, இரணைமடுக் குளத்திலிருந்து தொடர்ந்தும் நீர்வெளியேறி வருவதால் கண்டாவளை பிரசேத்தில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ந்தும் குளத்தின் நீர்மட்டம் 36 அடியைக் கடந்து காணப்பட்டுவருவதால் நீரை வெளியேற்றும் நடவடிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
தற்போது அளவில் நீரை தொடர்ந்து வெளியேற்றுவதானால் 36 அடியை நீர்மட்டம் நெருங்குவதற்கு குறைந்தது மூன்று நாட்கள் செல்லும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதைவிட கூடுதலாக நீரை வெளியேற்றினால் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகவேண்டிய ஏற்படலாம் என்பதால் நீர்வெளியேற்றும் அளவை மட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், 15 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை வரையான புள்ளி விபரங்களின் அடிப்படையில், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 262 குடும்பங்களைச் சேர்ந்த 935 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 தற்காலிகள வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 91 குடும்பங்களைச் சேர்ந்த 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு தற்காலிகாக வீடு சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவில் 194 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.