இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது
In இலங்கை February 16, 2021 2:39 am GMT 0 Comments 1239 by : Dhackshala
இலங்கையில் இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது.
நாட்டில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளன.
திவுலன்கடவல பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் வெலிகந்த கொவிட் 19 சிகிச்சை மையத்தில் இருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்வேதலவின்ன பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டி பொது வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது.
அதன்பின்னர் தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் குருதி விசமானமை, கொவிட் 19 நிமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்று உறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன்பின்னர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.
புற்று நோய் மற்றும் கொவிட் 19 நியுமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகேகொடை பகுதியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவருக்கு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட் 19 நிமோனியா, குருதி விசமானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக பாதிப்பு, இதயநோய், உயர் குருதி அழுத்தம், குருதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தமை என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வத்தளை பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் தொம்பே மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
குருதி விசமானமையினால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொவிட் 19 நிமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோய், நீரிழிவு நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும்.
ஹூன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா, தீவிர சிறுநீரக நோய், இதயம் செயலிழந்தமை என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.