இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 1, 2021 4:46 am GMT 0 Comments 1255 by : Yuganthini
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 38 வயதான ஆணொருவர், கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதியானமையை தொடர்ந்து, அவர் வெலிசறை மார்வு சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றுடன் நுரையீரல் தொற்று நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடுவளை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண்ணொருவர், கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கொவிட் நியூமோனியா மற்றும் இதயம் செயலிழந்தமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அங்குருவாதொட்ட பகுதியை சேர்ந்த 69 வயதான பெண்ணொருவர், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்துக்கு மார்பில் ஏற்பட்ட தொற்று மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியனவே காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது” என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மொத்தமாக 864 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,157 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் 827 நபர்கள் பேலியகொட- மினுவாங்கொட கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இதனால் பேலியகொட- மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் சிக்கிய நபர்களின் மொத்த எண்ணிக்கை 60,164 ஆக உயர்வடைந்துள்ளது. ஏனைய 10 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும், 27 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க கொரோனா தொற்றுக்குள்ளான 882 நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 57,159 ஆக பதிவாகியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,682 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 767 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.