இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு
In இலங்கை February 12, 2021 3:00 am GMT 0 Comments 1226 by : Dhackshala
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 5 பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலை, மோசமடைந்த நீரிழிவு, உயர்குருதி அழுத்தம் மற்றும் நரம்பு தளர்ச்சி நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 8ஆம் உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நிமோனியா, உயர்குருதி அழுத்தம், இதய நோய் மற்றும் குருதிக்குறைவு நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று cறுதியான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றால் மோசமடைந்த நுரையீரல் புற்றுநோய், மூச்சு திணரல், உயர் குருதி அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் தீவிரமடைந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடதளவின்ன பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவர் கொவிட் தொற்று உறுதியான நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா, குருதி விசமானமை, இதயம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்-19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 379 ஆக உயர்வடைந்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.