உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தெரிவு
In உதைப்பந்தாட்டம் September 25, 2018 4:44 am GMT 0 Comments 1435 by : Anojkiyan

விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் வீரர்கள், பணத்தை விட அவர்களின் திறமைக்கு கிடைக்கும் விருதுகளையே அதிகம் விரும்புகின்றனர்.
ஏனென்றால் அவர்கள் பெறும் பணத்தையும் விட, காலந்தோறும் அவர்களின் புகழ் பாட அந்த விருதுகளே பேசும் என்பதால் அவர்கள் விருதுகளையே அதிகம் நேசிக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக பிரபல விளையாட்டு, உயரிய விருதுகள் என வரும் போது சொல்லவா வேண்டும்…
வாருங்கள் பிரபல கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருது குறித்த செய்திக்குள் செல்லலாம்…
சர்வதேச கால்பந்து சம்மேளனம், ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனை, ஆண்-பெண் பயிற்சியாளர், சிறந்த கோல், இரசிகர்கள், என்போரை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
இதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு, நேற்று லண்டனில் பிரமாண்டமாக இடம்பெற்றது.
இதில், 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது, குரோஷியா அணியின் தலைவரான லூகா மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பெண் வீரருக்கான விருது பிரேசில் வீராங்கனையான மார்டாவுக்கு வழங்கப்பட்டது.
இதுதவிர, சிறந்த கோலுக்கான விருது, எவர்டன் அணிக்கெதிராக லிவர்பூல் கழக அணியின் நட்சத்திர வீரரான மொஹமட் சாலா அடித்த கோல் தெரிவுசெய்யப்பட்டது.
சிறந்த கோல்காப்பாளராக பெல்ஜியம் மற்றும் ரியல் மெட்ரிட் அணியின் கோல் காப்பாளர் திபோட் கோர்டொயிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
ஆண்களுக்கான சிறந்த பயிற்சியாளராக உலகக்கிண்ணத்தை ஏந்திய பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
பெண்களுக்கான சிறந்த பயிற்சியாளராக லியோன் அணியின் ரெய்னால்ட் பெட்ரோஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இரசிகர்கள் விருது, பெரு இரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதான, 2018ஆம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்காக 5 முறை பிபாவின் சிறந்த வீரர் விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவபர்பூல் அணிக்காக 43 கோல்கள் அடித்துள்ள மொஹமட் சாலா மற்றும் லூகா மோட்ரிச் ஆகிய மூவரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், ரொனால்டோ மற்றும் மொஹமட் சாலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச், 2018ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற உலக் கிண்ண கால்பந்து தொடரில், முதல்முறையாக குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதற்கு அணித்தலைவர் மோட்ரிச்சின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. உலகக் கிண்ண தொடரில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தியதால், இதற்காக அவருக்கு தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு சமீபத்தில் நடைபெற்ற 2017-18ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஓன்றியம் சார்பில் வழங்கப்படும் விருதும், லூகா மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டது.
இதிலும், மூன்று வீரர்கள் கொண்ட இறுதி பட்டியில், ரொனால்டோ மற்றும் மொஹமட் சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி லூகா மோட்ரிச், விருது வென்றிருந்தார்.
மேலும், பார்சிலோனா அணியின் தலைவரும், நட்சத்திர வீரருமான ஆர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸியின் பெயர், இந்த பட்டியலில் கூட இடம்பெறாதது, அவர்களின் இரசிகர்களை கடும் அதிருப்தியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.