உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு!

உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன.
மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது.
உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று விவாதம் எழுந்தது.
இதனைத்தொடர்ந்து சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு கடந்த ஆண்டு விஜயம் செய்தபோது பூமியின் மிக உயர்ந்த இடத்தை புதிய அளவீடாக கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்தச் சிகரத்தின் உயரத்தை அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பணியை இருநாடுகளும் இணைந்து தொடங்கியது.
இந்த பணி தற்போது நிறைவு பெற்று மறுமதிப்பீடு செய்யப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. அதன்படி மறுமதிப்பீட்டு உயரம் 8848.86 மீட்டரை நேபாளம் அறிவித்தது.
சீனாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லையில் எவரெஸ்ட் நிற்கிறது மற்றும் மலையேறுபவர்கள் அதை இருபுறமும் ஏறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.