ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் தொடர்பாக அரசாங்கத்துக்கு தெரியும்- சரத் வீரசேகர
In இலங்கை December 6, 2020 6:31 am GMT 0 Comments 1594 by : Yuganthini

ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் தொடர்பாக அரசாங்கத்துக்கு தெரியும். அது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணை குறித்து எதிர்க்கட்சி, நேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 257பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 86பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு 8இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை, இவ்விடயம் தொடர்பாக நீதிபதியை உத்தியோகபூர்வ சந்தித்து, வழக்கு விசாரணைகளை மேலும் துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
அரசாங்கம் என்ற ரீதியில் இவ்விடயத்தில் விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்.
ஆகவே, இவ்விடயத்தில் சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுப்போம்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு துறை சிறந்த முறையில் இல்லாதமையினாலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
மேலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பவர் தொடர்பாக அரசாங்கத்துக்கு தெரியும். ஆனால் தற்போது அந்த இரகசியத்தை வெளியிடமுடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.