கிளைமோர் குண்டு மீட்பு: மன்னாரில் பரபரப்பு
In இலங்கை April 22, 2019 9:51 am GMT 0 Comments 2583 by : Yuganthini
மன்னார்- ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பண்ணையின் உரிமையாளர் துப்பரவு பணியில் இன்று (திங்கட்கிழமை) ஈடுபட்டிருந்தப்போது, வெடிபொருள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமையை அவதானித்துள்ளார். பின்னர், சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டதோடு வெடி பொருளையும் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது கிளைமோர் குண்டு எனவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக, மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கண்டு பிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டினை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.