கொத்மலை பிரதேசசபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் : தலைவராக சுசந்த ஜயசுந்தர தெரிவு
கொத்மலை பிரதேச சபை தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தரவும், உப தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு இன்று (வியாழக்கிழமை) கொத்மலை பிரதேச சபை காரியாலயத்தில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைவருக்கான போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான சுசந்த ஜயசுந்தரவும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மகேஸ் கல்ஏதண்டவும் போட்டியிட்டனர்.
இதில் 30 வாக்குகளைப் பெற்று சுசந்த ஜயசுந்தர தலைவராக தெரிவானார். இதற்கு எதிராக போட்டியிட்ட மகேஸ் கல்ஏதண்ட 20 வாக்குகள் பெற்றார்.
இதையடுத்து உபதலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் சார்பில் போட்டியிட்டு தெரிவான மஹிந்த செனவீரவும், ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ரத்னம் சிவகுமாரும் போட்டியிட்டனர்.
இதில் மஹிந்த செனவீர 30 வாக்குகளைப் பெற்று உபதலைவர் பதவியை தனதாக்கி கொண்டார். இதற்கு எதிராக போட்டியிட்ட ரத்னம் சிவகுமார் 20 வாக்குகள் பெற்றார்.
53 உறுப்பினர்களைக் கொண்ட கொத்மலை பிரதேச சபை தலைவர் தெரிவு போட்டியின்போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவர் வாக்களிக்கவில்லை என்பததோடு, மஹஜன எக்சத் பெரமுன சார்பாக இருவரில் ஒருவர் வாக்களிக்கவில்லை. அத்தோடு ஒருவர் தலைவர் தேர்வின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், உப தலைவர் தேர்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் வாக்களித்தார் என்பதும் குறிப்பித்தக்கது.
கொத்மலை பிரதேச சபைக்கு தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு 20 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 13 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 16 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கு 02 ஆசனமும், மஹஜன எக்சத் பெரமுன கட்சிக்கு 02 ஆசனமும் கிடைக்கப்பெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.