கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் – அமெரிக்க தூதுவர்
In இலங்கை January 20, 2021 6:08 am GMT 0 Comments 1495 by : Dhackshala
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்கள் இலங்கை அரசாங்கத்தினால் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
எனினும், இறந்த முஸ்லிம்களின் சடலங்களை அவர்களின் மத நம்பிக்கைக்கு இணங்க அடக்கம் செய்யுமாறு பல்வேறு தரப்புக்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தினருக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச சுகாதார வழிகாட்டுதல்களின்படி மதநம்பிக்கைகளை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் உரிமையையும் கௌரவத்தையும் மதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை 1955 இல் கைச்சாத்திட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் அனைவரும் கற்பித்தல், பின்பற்றுதல், வழிபடுதல் போன்றவற்றில் தங்கள் மதநம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைரஸ் தொற்றானது சர்வதேச சவால்களை உருவாக்கினாலும் இதற்காக இரக்க குணத்தையும் நம்பிக்கைகளை மதிப்பதையும் இழக்கும் நிலையேற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.