கொரோனாவின் இரண்டாவது அலை சுனாமி போல ஆபத்தாக இருக்கும் – உத்தவ் தாக்கரே
In இந்தியா November 23, 2020 2:32 am GMT 0 Comments 1356 by : Krushnamoorthy Dushanthini

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை சுனாமி போல இருக்கலாம் என மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகள் கொரோான வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா தடுப்பூசி நம்மிடம் இல்லை. அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை. டிசம்பரில் கொரோனா தடுப்பு மருந்து வந்தாலும் அது மஹாராஷ்டிராவிற்கு எப்போது வரும் என தெரியவில்லை.
மாநிலத்தில் வசிக்கும் 12 கோடி மக்களுக்கும் இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட வேண்டும். மொத்தம் 25 கோடி தடுப்பூசி தேவை என்பதால் அதற்கு காலமாகும். எனவே அதுவரை வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் அதிகம் கூடக்கூடாது.
மீண்டும் ஊரடங்கு வேண்டாம். எனது 5 ஆண்டு கால ஆட்சி முழுவதையும் ஊரடங்குடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா போன்ற பண்டிகைகளை கட்டுப்பாடுடன் கொண்டாடினோம். தீபாவளி பண்டிக்கைக்கும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என நான் கூறியதை பொதுமக்கள் பின்பற்றினார்கள்.
கொரோனா முடிந்து விட்டது என யாரும் எண்ண வேண்டாம். வைரசின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை சுனாமி போல மிகவும் ஆபத்தானதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.