கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்
In ஆசிரியர் தெரிவு November 29, 2020 2:24 am GMT 0 Comments 1669 by : Dhackshala

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 02ஐச் சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் கொரோனா தொற்றினால் தீவிரமடைந்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு 8ஐச் சேர்ந்த 96 வயதான பெண்ணொருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் ஆஸ்துமா, கொரோனாவுடன் நிமோனியா நோய் நிலமையாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் ஏற்பட்ட கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு இரண்டாம் அலையில் பதிவான உயிரிழப்புகளில் அதிகமானோர் 60 வயதுகளுக்கு மேற்பட்டோர் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.