கொரோனா தொற்றிலிருந்து நாம் அதிகமான பாடங்களைக் கற்ற வேண்டிய நேரம் – உலக சுகாதார அமைப்பின் தலைவர்!

கொரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று நோய் அல்ல என வரலாறு நமகுக்குச் சொல்கின்றது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக காலநிலை மாற்றத்தையும், விலங்குகளை நலத்தையும் சரி செய்யாமல் மனிதகுலத்தின் நலனை மாத்திரம் மேம்படுத்துவது துரதிருஷ்டமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “உலகில் ஏதாவது பெருந்தொற்று நோய் ஏற்பட்டால், அதை சமாளிக்க குறுகியகால நோக்கில் பணத்தை வீசி எறிந்து அதை சமாளித்து விடுகிறோம், அந்த பெருந்தொற்று போனபின் அதை மறந்து விடுகிறோம்.
ஆனால், அடுத்து இதுபோன்று பெருந்தொற்று உருவானால் அதை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை நமக்கு இல்லை, அதற்காக ஒன்றும் செய்வதில்லை. அது ஆபத்தான குறுகியகால நோக்கில் செய்யப்படும் செயல், இதை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து நாம் அதிகமான பாடங்களைக் கற்ற வேண்டிய நேரம். நீண்ட காலமாக, இந்த உலகம் அச்சம் மற்றும் புறந்தள்ளுதல் எனும் வட்டத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுதான் உலகில் கடைசி வைரஸ் இல்லை என்று வரலாறு நமக்குச் சொல்லிவிட்டது. மனித குலத்தின் சுகாதாரம், விலங்குகளின் நலன், இந்த பூமியின் நலன் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது, ஒன்றோடொன்று சங்கிலிபோன்று பிணைப்பு கொண்டது என்று இந்த கொரோனா வைரஸ் உணர்த்திவிட்டது.
விலங்குகள், மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்காமல், காலநிலை மாற்றத்துக்கான அச்சத்தை போக்கி, பூமிய வாழும் கோளாக மாற்ற முயற்சி எடுக்காமல், மனிதர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, அவர்களின் சுகாதாரத்தை மட்டுமே உயர்த்த எடுக்கும் முயற்சிகள் அழிவுக்குதான் செல்லும்.
கடந்த 12 மாதங்களில் உலகம் தலைகீழாக மாறிவருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அந்த நோயையும் கடந்து சமூகம், பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பெருந்தொற்று வந்தால் அதை எதிர்கொள்ள எவ்வாறு தயாராக வேண்டும், சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெருந்தொற்றுகளை கண்டுபிடிப்பது, தடுப்பது போன்றவற்றில் உலக நாடுகள் முதலீடு செய்ய வேண்டும்.
இதுபோன்று பொதுசுகாதாரத்தில் உலக நாடுகள் முதலீடு செய்வதன் மூலம், நம்முடைய குழந்தைகள், அவர்களின் சந்ததியினர் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பாற்றல் மிக்கவர்களாகவும் மாறி உலகில் வாழ முடியும்“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.