சவூதிக்கு எதிரான ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை: வெள்ளை மாளிகை
In அமொிக்கா October 15, 2018 6:32 am GMT 0 Comments 1750 by : Farwin Hanaa
சவூதி ஊடகவியலாளர் காணாமற்போன சம்பவத்துடன் அந்நாடு தொடர்புபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கான நடவடிக்கையை உறுதியாக முன்னெடுப்பாரென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வொஷிங்டனின் வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற ஊடகங்களுடனான சந்திப்பில் வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லறி குட்லோ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவின் ஊடகவியலாளரும் அரசாங்க கொள்கை எதிர்ப்பாளருமான ஜமால் கஷோக்கி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ளார்.
அவர் காணாமற்போன சம்பவத்துடன் சவூதி அரேபிய நாட்டிற்கு தொடர்புள்ளாக அமெரிக்க அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும் சவூதியில் இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாக அமெரிக்க திரைசேரியின் செயலாளர் ஸ்டீவ் நுசின் குறிப்பிட்டுள்ளதையும் லறி குட்லோ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த விவகாரத்தில் சவூதிக்கு எதிராக ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால், அந்நாட்டுக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்க காங்கிரஸ் முன்னெடுக்குமென அமெரிக்க செனட் சபையின் சிறுபான்மைத்தலைவர் சக் ஸ்கமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.