சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பிரதமர் தீபமேற்றினார்
In இலங்கை December 26, 2020 9:18 am GMT 0 Comments 1461 by : Yuganthini

சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) தீபமேற்றி அக வணக்கம் செலுத்தினார்.
முதலில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக முற்பகல் 9.25 மணிமுதல் முற்பகல் 9.27 வரையான இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.
சுனாமி பேரழிவு இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகளாகின்றன. அக்கொடிய பேரழிவில் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழந்தனர்.
பேரழிவில் பல அன்புக்குரியர்வர்கள் உயிரிழந்தது மாத்திரமின்றி, அவர்களது இருப்பிடங்களையும் இழந்து, அந்த குடும்பங்களை சேர்ந்த இலட்சக் கணக்கானோருக்கு தங்களது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது என இதன்போது பிரதமர் நினைவுகூர்ந்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.