ஜனாதிபதியின் உத்தரவால் ரணிலின் உயிருக்கு ஆபத்து: ஐ.தே.க.
In இலங்கை October 28, 2018 4:37 pm GMT 0 Comments 1620 by : Ravivarman
ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட உத்தரவால் ரணில் விக்கரமசிங்கவின் உயிரிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பினைக் குறைக்குமாறு பொலிஸ்மா அதிபரிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் ரணில் விக்கரமசிங்கவின் உயிரிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது காணப்படும் அரசியல் குழப்பநிலைகளுக்கு ஜனாதிபதியே முக்கிய காரணம்.
அரசியலமைப்பிற்கு விரோதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினைப் பிரதமராக அறிவித்துள்ளார். இதனால் தற்போது நாட்டில் அசாதாரண நிலமை காணப்படுகின்றது.
இந்நிலையில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எமது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்தவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.