தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புக்களை ஆய்வு செய்தது மத்தியக் குழு
In இந்தியா December 6, 2020 9:26 am GMT 0 Comments 1391 by : Yuganthini

தமிழகத்துக்கு வருகை தந்துள்ள மத்தியக் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய உட்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் நேற்று (சனிக்கிழமை சென்னைக்கு வருகை தந்திருந்தனர்.
இந்தக் குழுவினர் 4 பேரைக் கொண்ட இரு பிரிவுகளாகப் பிரிந்து, இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியக் குழுவின் ஒரு பிரிவினர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அழகப்பாசாலை, ஜோதி வெங்கடாசலம் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி மண்டல அதிகாரிகள் எடுத்துக்காட்டினர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்களைச் சந்தித்த மத்தியக் குழுவினர், மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் குறைகளைக் கேட்டறிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூருக்குச் சென்ற மத்தியக் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை ஆய்வு செய்தனர். அதன்பின் அத்திப்பட்டுக்குச் சென்ற அவர்களுக்கு வெள்ளப் பாதிப்பு தொடர்பாக ஒளிப்படங்களை கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
உட்துறை இணைச்செயலாளர் அக்னிகோத்ரி தலைமையிலான மற்றொரு பிரிவினர் சென்னை வேளச்சேரி ராம்நகரில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியைப் பார்வையிட்டனர். வெள்ளப் பாதிப்புகளை ஒளிப்படங்கள் ஊடாக காட்டி, மத்தியக் குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் விளக்கினர்.
அதன்பின்னர் பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் தேங்கியுள்ள நீரைப் பார்வையிட்டனர். ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பள்ளிக்கரணையில் தேங்கிவரும் நிலையில், அதைப் பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்கு வடியச் செய்யும் வழிகள் பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
செம்மஞ்சேரியில் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிக்குச் சென்ற மத்தியக் குழுவினருக்குப் ஒளிப்படங்கள் ஊடாக மழைவெள்ளப் பாதிப்பு குறித்து விளக்கப்பட்டது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் உடனிருந்தார்.
தாம்பரம் அருகே முடிச்சூரில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். வெள்ளநீர் வடிகால்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் பாதிப்புகளை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சாய்ந்து நீரில் மூழ்கிச் சேதமடைந்த நெற்பயிர்களையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.