தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக்- வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமானவர்களின் படங்களைப் பகிர்பவர்களுக்குத் தடை இல்லை என வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர் 26ஆம் நாள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதையொட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும் முகநூல் தளமானது, ஒரு நாள் முதல் ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது.
அந்த நாளில், ஆதரவு அற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவருக்கு அடுத்த 60 நாட்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்திக்கின்றனர். இவையெல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் என முகநூல் முத்திரை குத்துகின்றது.
ஆனால், 60 இலட்சம் யூதர்களைக் கொன்றதற்காக ஹிட்லர் படத்தை, முகநூல் தளத்தில் பரப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதுபோலவே, இரண்டாம் உலகப் போர்க் குற்றவாளிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் முகநூல் தளங்களில் விரிவாகக் காணக் கிடைக்கின்றன.
அத்துடன், இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றவர்களின் படத்தைப் பகிரவும் எந்தத் தடையும் இல்லை. ஆனால், பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் முடக்குகின்றது முகநூல். அவ்வாறு அவரது படத்திற்கு, உலகில் இதுவரை எந்த நாடும் தடை விதித்தது இல்லை. ஆனால், முகநூல் மட்டும் தடை செய்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, இரவோடு இரவாக இடித்துத் தகர்த்துத் தரைமட்டம் ஆக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு, ம.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கடந்த 11ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையை, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகளை அந்தத் தளம் முடக்கி இருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலியாக இருக்கின்ற முகநூல், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக் கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது.
சமூக வலைதளங்களுள் உலகளவில் முதல் இடத்தைப் பெற்றிருக்கின்ற முகநூல் (Facebook) நிறுவனத்தின் போக்கு, தான்தோன்றித் தனமாகி வருகின்றது.
தாங்கள் வைத்ததே சட்டம், யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற இறுமாப்பும், ஆணவமும், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. முகநூலின் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கு நீடிக்குமானால், உலக நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும்.
நாடுகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை மதிப்பது இல்லை என அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகநூல் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். பல நாடுகளில் முகநூல் தளத்திற்குப் பல கட்டுப்பாடுகளையும், பல கோடி ரூபாய் தண்டமும் விதித்து இருக்கின்றார்கள்.
எனவே, ஒவ்வொரு நாட்டிலும், தாங்கள் விரும்பியவாறு அரசுகள் அமைய வேண்டும் என்பதற்காக, முகநூல் தளம் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான வகையில் முகநூல் செயற்பட்டு வருகின்றது. தமிழகத் தலைவர்களைக் களங்கப்படுத்த முயல்கின்றது. அவர்களது கருத்துகளைத் திரைபோட்டு மறைக்கின்றது. உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது.
எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவைக்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றேன்.
வெற்று இடத்தைக் காற்று நிரப்பியே தீரும், முகநூலுக்கு மாற்றுத் தளம் உருவாகியே தீரும்” என வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.