தற்கொலைக் குண்டுத்தாக்குதல் குறித்து ரணிலிடம் கேள்வி எழுப்பப்படும் – ஜே.வி.பி

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் இதுகுறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்படும் என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது இவ்வாறு கேள்வி எழுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தினத்தில் இந்த கேள்விகள் எழுப்பப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.