திருடர்களை பாதுகாக்கிறது ஐ.தே.க : அசாத் சாலி குற்றச்சாட்டு
அரசாங்கம் பதவியேற்ற மூன்று வருடங்களில், கொழும்பில் எந்தவித அபிவிருத்திப்பணிகளும் முன்னெடுக்கப்படவில்லையென கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். மாறாக திருடர்களை பாதுகாக்கும் வேலையை மாத்திரமே ஐ.தே.க. செய்துகொண்டிருக்கின்றதென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான அறிக்கை தொடர்பாக எமது ஆதவன் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே, அவர் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம் 4000 பில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறிய அசாத் சாலி, யார் திருடியிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அவசியமெனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, ஜனாதிபதி மைத்திரி ஐ.தே.க. மீது தற்போது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதால் தேர்தலுக்குப் பின்னர் கூட்டரசாங்கத்தில் பாதிப்பு ஏற்படாதா என எமது ஆதவன் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அசாத் சாலி கூட்டரசாங்கத்தை எந்தவகையிலும் பாதிக்காதென்றும் ஐ.தே.க.வில் உள்ள நல்ல மனிதர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, முறிகள் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது மாத்திரம் ஐ.தே.க. பழிபோடுவது தவறென்றும் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரசிங்க மற்றும் கபீர் ஹாசிம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் நாடாளுமன்றத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளாரென குறிப்பிட்ட அசாத் சாலி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை மீண்டும் ஒருதடவை ஆராய்ந்து பார்ப்பது சிறந்ததெனவும் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.