தௌஹீத் ஜமாத்துடன் கோட்டாவுக்கு தொடர்பில்லை என்கின்றார் பொன்சேகா!
In இலங்கை May 2, 2019 9:26 am GMT 0 Comments 2250 by : Jeyachandran Vithushan

குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புபட்ட அமைப்பென குற்றஞ்சாட்டப்பட்டுவரும் தௌஹீத் ஜமாத் அமைப்புடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பிருக்கின்றது என ராஜித சேனாரத்ன முன்வைத்த குற்றச்சாட்டை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
அஸ்கிரிய, மல்வத்த பீடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) சென்ற பொன்சேகா, அங்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார், இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலானது நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்டதாகவே இருக்கவேண்டும். அடிப்படைவாத அமைப்புடன் கோட்டாபயவுக்கு தொடர்பிருக்கும் என நான் நம்பவில்லை.
குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆரம்பத்தில் ஆதரித்தார் என்ற ஐ.தே.க.வினரின் கூற்றுகளையும் நிராகரிக்கின்றேன்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.