நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவருக்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அவர், பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார். இவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது இறப்புக்கு, கொரோனா தொற்று நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமையால் ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு நிலைமை காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கடந்த 12ஆம் திகதி உயிரிழந்தார். இவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் எனக் கண்டறியப்பட்ட பின்னர் அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவரது மரணத்திற்கான காரணம், கொரோனா தொற்று நிமோனியாவுடன் இதயம் செயலிழந்தமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 152ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.