நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம்: ஷிகர் தவான்
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கும் நானும், ரோஹித் சர்மாவும் நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உலகக்கிண்ண தொடர் மற்றும் ஐ.பி.எல். தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“கடந்த ஆண்டு எனக்கு சிறப்பாக இருந்தது. சர்வதேச ரி-20 போட்டிகளின் அதிக ஓட்டங்கள் எடுத்தேன். ஒரு சில ஏமாற்றங்கள் இருந்தாலும் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். ஐ.பி.எல்., தொடரை பொறுத்தவரையில் நீண்ட ஆண்டுக்குப் பின் எங்கள் டெல்லி அணிக்கு திரும்பியுள்ளேன். 21 வயதில் இங்கிருந்து சென்று 33 வயதில் மீண்டும் இணைந்துள்ளேன். இடைப்பட்ட காலத்தில் அதிக பாடம் கற்றேன். இந்த அனுபவத்துடன் டெல்லி அணியில் களமிறங்குகிறேன்.
சுப்பர் ஜோடி இந்திய அணியில் நானும், ரோஹித் சர்மாவும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் டோனி. இவ்விடயத்தில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். தற்போது இருவரும் சீரான ஓட்ட குவிப்பை வெளிப்படுத்தி, உலகின் சிறந்த ஆரம்ப ஜோடி வரிசையில் இணைந்தது மகிழ்ச்சி தருகிறது.
தற்போது சிரேஷ்ட வீரர் என்பதால் எங்களுக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும், எப்போது ‘ரிஸ்க்’ எடுப்பது, எப்படி அதை தவிர்ப்பது என எல்லாம் அத்துபடி. ரோஹித் சர்மா 201 போட்டிகள், நான் 123 போட்டிகள் விளையாடி விட்டோம். இதனால் நெருக்கடியான நேரங்களில் பயந்து விட மாட்டோம். பொறுமையாக செயல்பட்டு நேரம் வரும் வரை காத்திருந்து ஓட்டங்;கள் சேர்க்க முயற்சிப்போம்.
தற்போது உலகக்கிண்ண தொடருக்கு தயாராகி வருகிறேன். அடுத்து வரும் ஐந்து வார காலம் கூடுதலான பயிற்சியில் ஈடுபடப் போகிறேன். இதனால் புத்துணர்ச்சியுடன் களமிறங்க முடியும். ‘மினி’ உலகக் கிண்ணம் என்றழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண தொடரை இதற்கு முன் இங்கிலாந்தில் வென்றுள்ளோம். இதுபோல இம்முறையும் சாதிக்க முடியும் என நம்புகிறேன். உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான எங்கள் பாதையில் தவறுகள் செய்யாமல் பார்த்துக் கொள்வோம்” என கூறினார்.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான களமிறங்கி விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.