நைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய அரச படைகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள ‘கொண்டுகா’ பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காற்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்று கூடி போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு போகோஹராம் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இதில் 1 பெண் தீவிரவாதி கொண்டுவந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.