பார்க் & ரைட், மின் டிக்கெட் முறை ஜனவரி 1 முதல் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
In இலங்கை December 7, 2020 5:26 am GMT 0 Comments 1531 by : Jeyachandran Vithushan

ஜனவரி முதலாம் திகதி முதல் Park & Ride போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தும்போது பேருந்துகளுக்கான இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி, Park & Ride போக்குவரத்து செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதன் மூலம், கொழும்பபிற்குள் வருகை தரும் வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
அத்துடன், சொந்த வாகனங்களில் வருகை தருபவர்கள், மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளின் மூலம் கொழும்புக்கு வருகை தர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த பேருந்துகளில் வைபை மற்றும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதி ஆகியன காணப்படுவதாகவும் குறிப்பாக கோவிட் விதி முறைகளை மீறி மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் குழுவினரை கைது செய்யவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பணப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், இலத்திரனியல் பயணச் சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.