2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில்! – திகாம்பரம் உறுதி
In இலங்கை August 13, 2018 1:59 am GMT 0 Comments 1584 by : Yuganthini
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்க வேண்டுமென மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பூண்டுலோயா, டன்சினன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்திபுரம் கிராமத்தை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பிரதமர் ரணில் வேட்பாளராக போட்டியிட்டால் மலையகத்திலுள்ள பெருந்தோட்ட மக்கள் அனைவரும் அவருக்கு முழு ஆதரவினை வழங்கி வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதே எனது ஆசையாகும்.
மேலும் பெருந்தோட்ட மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கக்கூடிய வல்லமை பிரதமரிடமே காணப்படுகின்றது.
அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பெருந்தோட்ட மக்களுக்கு சொந்தமாக காணிகள் வழங்கப்படுமென மிகவும் உறுதியுடன் கூறியிருந்தார்.
இந்தவகையில் 2015ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்களுக்கு கொடுத்த அவ்வாக்குறுதியினை நிறைவேற்றும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆகையால் 2020 ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்” என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.