பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் – பிரதமர்
In இலங்கை February 12, 2021 4:22 am GMT 0 Comments 1214 by : Vithushagan
பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆணைமடு கண்ணங்கர வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” உங்கள் அனைவரையும் சந்திக்க கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
நாம் எவ்வளவு பாடுபட்டாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோரே பல்பலைக்கழகத்திற்கு செல்ல முடியும். அதனால்தான் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன. விசேடமாக தொழில் பயிற்சி அதிகாரசபையை உருவாக்கி, எமது பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம்.
அவ்வாறு பிள்ளைகளின் கரங்களை பலப்படுத்தினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று கொள்வதற்கு கடினமாக அமையாது. எமது யுகத்தில் நாங்கள் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளித்து கொரியா மற்றும் ஜப்பானுக்கு அனுப்பத் தொடங்கினோம்.
எனக்கு நினைவிருக்கிறது முதல் முறையாக எங்கள் தொகுதியில் உள்ள இளைஞர்களை கொரியா செல்லுமாறு கூறியபோது நாங்கள் உங்களுக்காக வேலை செய்தது கொரியா செல்வதற்கு அல்ல என்று குற்றம் சாட்டினர். அதனையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பினேன். அதன் பின்னர் முதலாவது சம்பளத்தை பெற்று அப்பணத்தை வீட்டிற்கு அனுப்பியவுடன் அந்த இளைஞர்கள் மீண்டும் ஓடிவந்து ஐயோ எங்களையும் அனுப்புங்கள் என கூறினர்.
அதுவரை கொரியா தொடர்பில் கொரியா குறித்து ஒரு விசித்திரமான நிலைப்பாடே காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலைப்பாடில்லை. இன்று எமது இளைஞர்கள் வெளிநாட்டிற்கு சென்று பணியாற்ற ஆர்வம் காட்டிவருகின்றனர். நாம் உங்களிடம் எதிர்பார்ப்பது என்ன? முடிந்தளவு பாடுபட்டு கல்வி கற்று எமது பல்கலைக்கழகத்திற்கு சென்று சிறந்த கல்விமான்களாகுங்கள்.
பல பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை. பாடசாலை காலத்திலிருந்தே பிள்ளைகளை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். பிள்ளைகள் புத்தக பூச்சிகளாக இருப்பதும் ஒரு பாரிய அழுத்தமாகும்.எனவே, இந்த காலகட்டத்தில் நீங்கள் பெறும் அறிவு கல்விக்கு மட்டுமல்ல, விளையாட்டு மற்றும் தொழிற்பயிற்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பிள்ளைகள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்றே இந்த பிள்ளைகளின் பெற்றோரான நீங்கள் அனைவரும் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடின முயற்சியுடன் கல்வி கற்று சிறந்த குடிமக்களாக மாறுமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.