யாழ்.கொழும்புத்துறை 3ஆம் குறுக்கு தெரு சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காக முட்கம்பி வேலிகள் அடைத்து வீதி மூடப்பட்டது.
இந்த வீதியினை மூடும் உத்தரவு தொடர்பில் வீதிக்காக காணியினை வழங்கிய காணி உரிமையாளருக்கு எழுத்துமூலமான உத்தரவு ஒன்றினை அனுப்பியுள்ள யாழ் மாநகர ஆணையாளர், காணி உப பிரிவிடலை தாம் இரத்துச் செய்துள்ளதாகவும் காணியின் வடக்குப் பக்கத்தில் காணியின் வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கையை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
யாழ் மாநகரசபையின் ஆணையாளரினால் வீதியை மூடும் குறித்த எழுத்துமூல உத்தரவு அனுப்பப்படுவதற்கு முன்பாக சிலரால் வீதியை மூடி கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை பொதுமக்கள் அகற்றி வீதியை பயன்படுத்திய நிலையில் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் வீதி அடைக்கப்பட்டதாகவும் அதன் பின்பே வீதியை மூடும் உத்தரவு அனுப்பப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்புத்துறையில் 2015ஆம் ஆண்டு தனியார் காணி உரிமையாளர்கள் சிலரின் ஒப்புதலுடன் அவர்களினால் வீதி அமைக்க இடம் வழங்கியதன் அடிப்படையில் தொடர்பற்றிருந்த நிலையிலிருந்த இரு வீதிகள் காணி உப பிரிவிடல் ஊடாக காணி உரிமையாளர்களின் சம்மத்துடன் 2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுமக்களின் பாவனைக்காக நகர அபிவிருத்திசபையினால், இணைக்கப்பட்டு ஒரு வீதியாக்கப்பட்டது.
அதன் பின்னர் உப பிரிவிடுகை செய்யப்பட்ட ஒழுங்கைவரை யாழ்ப்பாணம் மாநகரசபையினால் தாரிடப்பட்டு வீதியின் ஒரு பகுதி தார் வீதியாகவும் மற்றைய பகுதி மணல் வீதியாகவும் பயன்படுத்தப்பட்டுவந்தது.
எனினும், வீதியின் எதிர்த்திசையில் வசிப்பவர்கள் எனக் கூறப்படும் ஒரு சிலரினால் இரு மாதங்களுக்கு முன் குறித்த வீதிக்கு குறுக்காக கொங்கிறீற் தூண்கள் இடப்பட்டு வீதி மூடப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் அதனை அகற்றிவிட்டு வீதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ் மாநகரசபையிலும் முறையிட்டுள்ளனர். எனினும் முன்னர் தம்மால் அனுமதி வழங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டன என யாழ் மாநகரசபையினால் பொதுமக்களுக்கு பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக மேலும் இரு தடவைகள் குறித்த நபர்களினால் வீதி மூடப்பட்ட நிலையில் பொதுமக்களால் அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து வீதியை மூடும் குறித்த நபர்கள் யாழ் மாநகர முதல்வரைச் சந்தித்திருந்த நிலையில், காணி உப பிரிவிடலை தாம் இரத்துச் செய்துள்ளதாகவும் காணியின் வடக்குப் பக்கத்தில் காணியின் வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கையை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வீதி பாடசாலை மாணவர்கள் கடற்றொழிலாளர்கள் என சுமார் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களால் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. குறித்த வீதியினை மூடினால் அப்பகுதி மக்கள் தாம் தொழிலுக்கோ, மாணவர்கள் பாடசாலைக்கோ அரைக் கிலோ மீற்றரில் கடக்கவேண்டிய வீதியை ஒன்றரைக் கிலோ மீற்றர் தாண்டி சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமது அன்றாட நடவடிக்கைக்கு அத்தியாவசியமான இந்த வீதியை இவ்வாறு செய்வது தமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் மக்கள், அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.