மன்னாரில் மூன்று கிராமங்களுக்கு வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிவைப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று கிராமங்களுக்கு வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் இன்று (சனிக்கிழமை) நாட்டிவைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாதிரிக் கிராம திட்டத்திற்கமைவாக இச்சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் குறித்த வீட்டுத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 24 வீடுகள், பட்டித் தோட்டம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ள 26 வீடுகள் மற்றும் மன்னார் சின்னக்கடை பகுதியில் அமைக்கப்படவுள்ள 18 வீடுகளுக்கு ஆரம்ப கட்டமாக அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுகளில் மன்னார் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, கிராம அலுவலர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ராதா பெர்னாண்டோ, மன்னார் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வுகளுக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவில் நாடளாவிய ரீதியில் 2500 மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.