முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

நாடு முழுவதும் முன்னுரிமை அடிப்படையில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், முன்னுரிமை அடிப்படையில் யாருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது என்பது குறித்து கடந்த சில நாட்களாக மத்திய அரசு விரிவான தகவல்களை சேகரித்தாக கூறினார்.
அதன்படி கொரோனா தொற்றுத் தடுப்பில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னுரிமை பட்டியலில் இருப்பவர்களுக்கு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் நாளை மறுநாள் மற்றும் 29ஆம் திகதி தடுப்பூசி சோதனை முறை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை எவ்வாறு பதப்படுத்துவது, தடுப்பூசியை எவ்வாறு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது, தடுப்பூசி செலுத்தும்போது மக்கள் கூட்டத்தை எவ்வாறு கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக சோதனை நடைபெறவுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இலட்சத்தீவை தவிர, நாடு முழுவதும் மாநில அளவில் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 681 மாவட்டங்களில் 49 ஆயிரத்து 604 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.