கல்முனையில் வலுப்பெறுகிறது போராட்டம்: கருணா – வியாழேந்திரன் – கோடீஸ்வரன் களத்தில்!
In ஆசிரியர் தெரிவு June 19, 2019 8:15 am GMT 0 Comments 2731 by : Dhackshala

கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேலும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் மற்றும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோரும் போராட்டக் களத்திற்குச் சென்று தமது ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
UPDATE – மதத்தலைவர்களின் போராட்டத்திற்கு கருணாவும் ஆதரவு!
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடிஸ்வரனும் அங்கு சமூகமளித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
மதத்தலைவர்களின் போராட்டக் களத்திற்குச் சென்றார் கோடீஸ்வரன் (இரண்டாம் இணைப்பு)
கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மதத்தலைவர்களின் போராட்டக்களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மதத்தலைவர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே, கோடீஸ்வரன் அங்குச் சென்றுள்ளார்.
இதேவேளை இந்த போராட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் முகமாக கல்முனை புறநகர பகுதிகளில் நேற்றிரவு டயர்கள் எரிக்கப்பட்டதாகவும் இனந்தெரியாத கும்பலொன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் (முதலாம் இணைப்பு)
சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது.
உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை போராட்ட களத்திற்குச் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டாரநாயக்க, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், போராட்டத்தை கைவிடும்படி அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.
எனினும் போராட்டக்காரர்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளனர். அத்தோடு அரச அதிபர் இந்த விடயத்தில் ஏதாவது முடிவெடுப்பதென்றால் இன்று மதியம் 2 மணிக்குள் எடுக்கும்படியும் அதற்குள் முடிவொன்று எடுக்கப்படாவிட்டால் மதியம் 2 மணிக்கு அதிரடி முடிவொன்றை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.