வங்காலை, கற்றாளம் பிட்டியில் கற்றாளை அகழ்வுக்குத் தடை

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாளைச் செடிகளை பிடுங்குவதற்கு நானாட்டான் பிரதேச சபை தடை விதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மன்னார் நானட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காணப்படும் கற்றாளைகளை சட்ட விரோதமாக மூட்டை மூட்டையாக அகழ்வு செய்யப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் கற்றாளை அகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் வங்காலை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எனினும் தொடர்ச்சியாக கற்றாளைச் செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற நானாட்டான் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானராஜ் சூசையால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடைப்படையில் வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் கற்றாளை அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.
குறித்த தடை தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் இயற்கையாக கற்றாளை செடிகள் காணப்படும் பிரதேசமான வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மன்னாரில் உள்ள எருக்கலம் பிட்டி, சாந்திபுரம், தாராபுரம் போன்ற பகுதிகளிலும் சட்ட விரோதமான கற்றாளை அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. எனவே சட்டவிரோத கற்றாளை அகழ்வு இடம்பெறும் அனைத்து பகுதிகளிலும் மும்மொழியிலான அறிவித்தல் பலகைகளை காட்சிப் படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.