ஹற்றனில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு – மலையகத்தில் மாணவர்களின் வருகை குறைவு
In இலங்கை November 23, 2020 5:04 am GMT 0 Comments 1759 by : Yuganthini

நாடளாவிய ரீதியில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளன.
மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி அச்சமின்றி வழமைபோல் பாடசாலைகளுக்கு வந்திருந்தாலும், மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் பாடசாலை வளாகத்துக்குள் வந்ததும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை கழுவிய பின்னர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், வகுப்பறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எனினும் ஒரு சில பாடசாலைகளில் இதனை காணமுடியவில்லை. வளப்பற்றாக்குறையே இதற்கு காரணம்.
நாட்டில் 10 ஆயிரத்து 165 அரச பாடசாலைகளில் தரம் 6 முதல் தரம் 13 வரை உள்ள 5 ஆயிரத்து 233 பாடசாலைகள் உள்ளன.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
அதேவேளை, ஹற்றன் கல்வி வலயத்திலுள்ள ஹற்றன் வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளும் இன்று திறக்கப்படவில்லை.
இப்பகுதிகளில் நேற்று கொரோனா தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே பாடசாலைகள் திறக்கப்படவில்லை. அத்துடன், இப்பகுதிகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களை வீட்டில் இருந்தே கல்வி நடவடிக்கைகளை தொடருமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.