மக்கள் ஆணைக்கு இணங்க, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டிய பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளதாவது” புதிய அரசாங்கமொன்றை பெரும்பான்மையான மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் பிழையான செயற்பாடுகளை சுட்டிக்காட்டும் அதேநேரம், சரியான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் தயாராகவே உள்ளோம்.
எமது கட்சியின் கொள்கைகளுக்கு இணங்க நாம் செயற்படுவோம். பொதுத் தேர்தலில் கூட்டணியமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறுகிறது. விரைவில், இதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்போம்.
மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளார்கள். இந்த ஆணையை மதித்து நாட்டை பொருளாதார ரீதியாக இவர்கள் முன்னேற்ற வேண்டும். வாகனங்கள் தொடர்பாக எதுவும் கூறமுடியாது. நான் இரண்டு வாகனங்களை தான் பயன்படுத்தினேன். இதனை ஒப்படைத்துவிட்டு, தற்போது தனிப்பட்ட வாகனத்தில்தான் பயணிக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.