புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.
இதன்படி அவர், உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில் போட்டியிடவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) வெருகல் பிரதேச சபைக்குட்டபட்ட மக்களுக்கான தெளிவூட்டல் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாம் முப்பது வருட கால போராட்டத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டு ஜனநாயக ரீதியில் அரசியலுக்குள் நுழைந்து தற்போது மக்கள் மத்தியில் அரசியல் பணிகளில் செயற்பட தீர்மானித்துள்ளோம்.
அதன் படி தற்போது நிலவும் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அற்ற நிலையில் எனக்கு என்று ஒரு நிரந்தர அரசியல் பலத்தையும் கொள்கைகளையும் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக தயாராகியுள்ளோம்.
அதன் பிரகாரம் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் தலைவர் ஆனந்த சங்கரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து தற்போது களமிறங்கியுள்ளோம்.
இருந்தும் இவ்வளவு காலமாக போராளிகள் விடுதலைப்புலிகள் என நாம் மக்களுக்காகவே போராடினோம். மீண்டும் அவர்கள் மத்தியிலேயே அரசியல் களத்தில் இணைந்து செயற்படவுள்ளோம். ஆகையினால் எனது வேட்பாளர்களையும் கட்சியின் செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என கூறினார்.