அரசாங்கம் ஏமாற்றினால் சர்வதேசத்திடம் நியாயம் கேட்போம்: அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருநாளும் தமிழ் மக்களுடைய இறைமையை விட்டுக்கொடுக்காது. எங்களை அரசாங்கம் ஏமாற்றுமாகாவிருந்தால் எங்களது மக்களின் நலனுக்காக சகலவற்றையும் தூக்கி எறிந்து வெளியில் வந்து சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுப் புறப்படுவோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அடைக்கலநாதன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றுகையில், இடைகால அறிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியன் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு விலைபோய் விட்டது என தற்போது பிரசாரம் செய்கிறார்கள். இடைக்கால அறிக்கை ஒரு முழுமையான அறிக்கை அல்ல.
சர்வதேசம் எங்களை ஏமாற்ற முடியாதளவிற்கு ஒரு வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் பேசுகிறார்கள். சர்வதேசத்தின் ஊடாக மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் கிடைப்பதற்காக நாங்கள் மெதுவாகச் சென்றுகொண்டிருக்கிறோம்.
புதிய அரசியல் சாசன உருவாக்கத்தின் போது அரசாங்கத்திற்கு உதவிகள் வழங்கினோம். அதிலே நாங்கள் கெட்ட பெயர் வாங்கினோம். ஆனால் இந்த அரசாங்கமும் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என நாங்கள் உணர்கின்ற சந்தர்ப்பத்தில் நாங்கள் சர்வதேசத்திடம் கூறமுடியும்.
நாங்கள் வெளியிருந்து ஆதரவு தெரிவித்து இனப்பிரச்சினைத் தீர்ப்பதற்கான முயற்சினை மேற்கொள்ளுகின்ற சந்தர்ப்பத்திலே எங்களது முயற்சியால் எமது உறவுகள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச் சென்று மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு புதிய அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணையின் அடிப்படையில் சம்பந்தன் ஐயாவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்துள்ளது. அது அரசாங்கம் வழங்கிய பிச்சை அல்ல. தமிழ் மக்களுக்கு கிடைத்த கௌரவம் எனப்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் மக்களை விலைபேசி அவர்களின் இறைமை மீது சவாரி செய்யாது. சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும். அந்த நியாயத்தைப் பெறும் வரைக்கும் போராடும். அரசாங்கம் ஏமாற்றும் என நினைத்து எமது செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இருந்தால் யாரிடமும் நியாயம் கேட்க முடியாது. சர்வதேசத்தின் உதவி பெறப்பட வேண்டுமானால் நாங்களும் சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொந்தங்களைப் பிடித்து வைத்து வாக்களிக்க வேண்டும் என கூறிய வரலாறு மட்டக்களப்பிலே நடந்தது. அந்த நிலையிலும் எமது உறுப்பினர்கள் சோரம் போகவில்லை’ என்றார்.