வைரமுத்துவை மிரட்ட கனவு காணாதீர்கள்! – வைகோ

கவிஞர் வைரமுத்துவை மிரட்டலாம் அல்லது ஊறு விளைவிக்கலாம் என கனவு கூட காண வேண்டாம் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ‘ஆண்டாள்’ பற்றிய மாநாடு ஒன்றில் வைரமுத்து ஆற்றியிருந்த உரை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் பல அரசியல் தலைவர்களும், இந்து அமைப்புக்களும் கண்டனத்தை வெளியிட்டிருந்தன.
இந்தக் கருத்து தொடர்பில் வைரமுத்து தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் சமூக வலைத்தளங்களில் கடுமையான வன்சொற்கயைப் பயன்படுத்தியும் மிரட்டியும் கருத்துக்கள் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
‘நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளி தான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார்.
அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறி முறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவையாகும்.
அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். வைரமுத்து தனி மனிதரல்ல. அவர் தமிழர்களின் சொத்து.
விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் இலக்கியப் பணியாற்றிவரும் நாளேடும் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக்கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும்.
ஆனால், கவிஞர் வைரமுத்துவை வன்சொற்களால் இழிவுபடுத்த முயல்வதும், உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும், நாளேட்டை அச்சுறுத்துவதும் மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம்.’ என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.