போராட்டங்களை மலினப்படுத்தும் செயல்களைக் கூட்டமைப்பு செய்யாது – அடைக்கலநாதன்
தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ கட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் உள்ள முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது வடக்கு கிழக்கில் பின்னடைவை சந்தித்திருக்கின்றது. மக்களுடைய பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கையாண்ட விதத்தினை மக்களிடம் சொல்லவில்லை. மற்றும் தமிழ் கட்சிகளுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கியிருந்தமை போன்றவையே இதற்குக் காரணங்களாகும்.
எங்களுடைய வாக்குகள் பிரிக்கப்பட்டமையால் பெரும்பான்மைக் கட்சிகள் பெரும்பாலான ஆசனங்களை பெற்றுக்கொண்டன. மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வே எங்களுடைய பின்னடைவுக்கு காரணமாகும். இதனை நாங்கள் திருத்திக்கொள்ளாதவரை மேலும் பின்னடைவையே சந்திப்போம்.
காணாமல் போனோர் காரியாலயம் சர்வதேச நீதிபதிகளைக்கொண்டு விசாரித்து நல்ல தீர்ப்பை வழங்கவேண்டுமென்ற ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்திலே இந்தக் காரியாலயத்தை அமைத்திருந்தது.
எதிர்வரும் காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்தும் இந்த நாட்டில் நடைபெறக்கூடாது என்ற சட்டத்திற்கே நாங்கள் ஆதரவளிக்கின்றோம். ஐ.நா. வின் மனித உரிமை ஆணையாளர் இங்கு வருகை தந்திருந்தபோது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் பேசியிருந்தோம். நாடாளுமன்றத்திலே மூன்று முறை ஒத்திவைப்புப் பிரேரணையை நாங்கள் கொண்டுவந்திருந்தோம்.
அத்துடன் ஐ.நா. சபையின் தீர்மானங்களை உடனடியாக அமுல்படுத்துமாறு நாங்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.
எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்கின்ற எந்தவொரு வேலையையும் செய்யாது. இலங்கை அரசாங்கத்திடம் விலைபோகின்ற எந்தவொரு விடயத்தையும் செய்யாது” என்று கூறினார்.