மீள்குடியேற்றப்பட்டும் அடிப்படை வசதிகள் இல்லை – முள்ளிக்குளம் மக்கள் விசனம்
In இலங்கை April 13, 2019 4:29 am GMT 0 Comments 2103 by : Dhackshala
தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை என்று முள்ளிக்குளம் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயத்தில் அரச அதிகாரிகள் பாராமுகம் காட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தண்ணீர், கல்வி, மற்றும் எனைய பொது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பல மைல் தூரம் செல்லவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கும் அவர்கள் தள்ளப்பட்டனர்.
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து 2016ஆம் ஆண்டு தமது பூர்வீக நிலத்தில் குடியர்த்துமாறு கோரி இம்மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து, 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு முள்ளிக்குளம் கிராமத்திற்குள் மீள் குடியேற்றத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், மீள் குடியேறி இரண்டு வருடங்கள் கடந்தும் முள்ளிக்குளம் மக்கள் அடிப்படை வசதிகள்கூட பூர்த்தி செய்யப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படும் தற்காலிக கொட்டில்களில் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று இதுவரை குறித்த மக்கள் வசிப்பதற்கு தற்காலிக பூரணப்படுத்தப்பட்ட கொட்டில்கள், குடிப்பதற்கு நீர் வசதியோ மின்சார வசதியோ அரசங்கத்தினால் செய்துதரப்படவில்லை என்றும் முள்ளிக்குள மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் மின்சார வசதில் இல்லாததால் இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுவதால் தாங்கள் மீண்டும் மலங்காட்டு பகுதிக்கே செல்லவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.