இலங்கையில் மேலும் 7பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு January 29, 2021 3:04 am GMT 0 Comments 1441 by : Yuganthini
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 297ஆக அதிகரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆணொருவர் இத்தேபான மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொவிட்19 நியூமோனியா நிலை, நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் என்பன அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 73 வயதான ஆணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நியூமோனியா நிலையால் ஏற்பட்ட மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் குருதி அழுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – கல்லேல்ல பகுதியை சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட்19 நியூமோனியா நிலை, இதய நோய், குருதி விசமானமை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 61 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார். அதன்பின்னர் அவர் முல்லேரியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிலையால் இதயம் செயலிழந்தமையே காரணமாகும். அதேநேரம், கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 61 வயதான ஆண் கைதியொருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட்19 நியூமோனியா நிலை,மாரடைப்பு, நீரிழிவு அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நியூமோனியாவாகும்.
இதேவேளை, எந்தரமுல்ல பகுதியை சேர்ந்த 62 வயதான ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கடந்த 21 ஆம் திகதி உயிரிழந்தார். கொவிட்19 நியூமோனியா நிலை, சிறுநீரக பாதிப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 586 ஆக உயர்வடைந்துள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 852 பேருக்கு நேற்று கொவிட்19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 40 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 33 பேரும், ஓமானில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் அதில் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 6 ஆயிரத்து 854 பேர், கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.