இலங்கை பயணத்தை தவிர்க்குமாறு இங்கிலாந்து அறிவுரை!
In இங்கிலாந்து April 25, 2019 3:52 pm GMT 0 Comments 3357 by : shiyani

அத்தியாவசியமான பயணத்தைத் தவிர்த்து இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு தன்னாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிறு ஈஸ்டர் தினமன்று இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டவர்கள் விஜயம் செய்யும் இடங்கள் உட்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் ஏற்கனவே தங்கியுள்ள பிரித்தானியர்களை மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்குமாறும் இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு சட்டத்தை பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது தங்கியுள்ள பிரித்தானியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து பயணத்துறையுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.