இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் – அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்
In ஆசிரியர் தெரிவு November 16, 2020 5:03 am GMT 0 Comments 2456 by : Jeyachandran Vithushan

சிறு தொழில் நிறுவனங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு அரச வங்கிகள் மூலம் குறைந்த வட்டியுடன் வணிகக் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி வருகின்றார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, “அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது, இளைஞர்கள் வணிக கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எனக்குத் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மூலம், இளைஞர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் இன்றி நிதி உதவியைப் பெற உதவும் ஒரு கடன் திட்டத்தை வடிவமைக்க இலங்கை மத்திய வங்கியுடன் அமைச்சு கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது” என கூறினார்.
தற்போது, தனியார் மற்றும் அரச வங்கிகளில் இந்த கடன்களுக்கான வட்டி மிகவும் அதிகமானது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இது சிறு நிறுவன உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாமல் போகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
2021 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி கடன் திட்டத்தை நிறுவ அமைச்சு போதுமான நிதியை ஒதுக்குகிறது, இதனால் இளைஞர்களுக்கு இலகுவாக வணிக கடன்களைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.