ஐ.பி.எல். ரி-20 தொடர்: பெங்களூர் அணியை வீழ்த்தியது மும்பை அணி!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 31ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிபட்டியலில் 10 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், ரோறயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய ரோறயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஏ.பி. டிவில்லியர்ஸ் 75 ஓட்டங்களையும், மொயின் அலி 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக லசித் மாலிங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
மறுபுறம் இந்த தோல்வியின் மூலம், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, குயிண்டன் டி கொக் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக மும்பை அணி சார்பில் 4 விக்கெட்டுகளை சாய்த்த, லசித் மாலிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.