கூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்

கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது.
அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகேஷன் தயாரிப்பதற்கான செயலியில், வாடிக்கையாளரின் தகவல்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் திருடப்படுகிறது என்ற பிழையை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார்.
அவரின் இந்த சேவையை அங்கீகரித்துள்ள கூகுள் நிறுவனம், அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது.
மேலும் அவரின் பெயரை கூகுளின் Hall of Fame இல் இணைத்து மரியாதை அளித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீராம்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.