கொத்தமல்லி எனத் தெரிவித்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குப்பைகள்!
In இலங்கை December 25, 2020 4:53 am GMT 0 Comments 1492 by : Dhackshala

உக்ரைனிலிருந்து கொத்தமல்லி எனத் தெரிவித்து குப்பை கொள்கலன்கள் மறுபடியும் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை சுங்கப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8 இறக்குமதியாளர்களினால் உக்ரைனிலுள்ள AGRONIKA TRADE எனப்படும் நிறுவனத்தினூடாக இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10ஆம் திகதி இந்த 8 கொள்கலன்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 20 கொள்கலன்கள் 21ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி, வரி நீங்கலாக 756 இலட்சம் ரூபா என பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்கலன்களில் நான்கு நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே இவற்றில் விவசாயக் கழிவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் மோசடியில் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டார். இடைத்தரகர்கள் சூழ்ச்சி செய்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன..
இலங்கை சுங்கத்தின் சட்டங்களுக்கு அமையவும், சுற்றாடல் சட்டத்திற்கு அமையவும், தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் இந்தக் கழிவுக் கொள்கலன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யவோ வைத்திருக்கவோ முடியாது என்பதால், அவற்றை மீண்டும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுனில் ஜயரத்ன கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.