சிங்கள மக்களின் அச்சத்திற்கு சிறுபான்மையினரா பலிக்கடா?
In சிறப்புக் கட்டுரைகள் March 10, 2018 8:19 am GMT 0 Comments 3893 by : Arun Arokianathan
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
“தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப் புலிகள் மீண்டும் மீட்சிபெறப் போகின்றனர், சிங்கள இனம் குறைந்து செல்கிறது, பௌத்த மதஸ்தலங்கள் நாசமாக்கப்படுகின்றன போன்ற உளரீதியான அச்சமொன்று சிங்கள மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டுள்ளது. பொதுவாக சிங்கள இனவாதிகள் எனக் கூறுபவர்களுக்கும் அப்பால், சாதாரண சிங்கள மக்களின் மூளைகளிலும் நாடு முடிந்துவிட்டது என்ற அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. “என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஞ்ஞானம் இன்று மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை வழங்கிவருகின்ற காலத்தில் கற்கால மனிதர்கள் போன்ற சிந்தனைகளுடன் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுவதற்காக சிறுபான்மையினர் பலிக்கடா ஆகவேண்டுமா? என்ற கேள்வி வலுவாக எழுகின்றது.
இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகத் திகழும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நல்லெண்ணம் கொண்ட சகல மக்களும் சகவாழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டுமென்றே விரும்புகின்றனர். ஆனால், இனவாதமும் மதவாதமும் இம்மக்களின் சமாதான, சகவாழ்வுக்குத் தொடர்ச்சியாக சவால் விடுத்துக்கொண்டிருப்பதை வரலாற்று நெடுகிலும் அவதானிக்க முடிகிறது.
அண்மைக்காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதை இலக்காகக் கொண்டு செயற்படும் கடும்போக்காளர்கள் முஸ்லிம்களின் மத, கலை, கலாசார, பண்பாட்டு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்களில் போலியான குற்றச்சாட்டுக்களை தாக்குதல்களை மேற்கொணடு வருவதைக் காணலாம்.
இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரும், பின்னருமான காலங்களில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்ட இனவாதச் செயற்பாடுகள் தீராத இனப்பிரச்சினையையும், முப்பது வருட கால கொடூர யுத்தத்தையும், பேரழிவுகளையும் விளைவுகளாக கொடுத்தது.
அதன் வடுக்களும், வேதனைகளும், மறையாத, மறவாத நிலையில், அவற்றின் அழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் முற்றுமுழுதாக நிவாரணம் வழங்கப்படாத சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்களுக்கு நிவாரணமும் நிரந்தரத் தீர்வும் வேண்டி வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கூட பல்வேறு கோணங்களில் போராட்டங்களை நடத்தி வருவதுடன், அவற்றினூடாக பல வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து சர்வதேசத்தினதும், அரசினதும் கவனத்தை ஈர்க்கச் செய்து வருகின்றனர்.
சர்வதேசத்தின் இறுக்கமான பிடிக்குள் இலங்கை தள்ளப்படுவதற்கு இனவாதத்தின் பரம்பல் ஏற்படுத்திய காயங்கள்தான் என்பதை மறுக்க முடியாது. சர்வதேசம் பல்வேறு பிரேரணைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுங்கள் இல்லைேயல் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி நகர வேண்டி வரும் என இலங்கைக்கு எச்சரிக்கை விடும் அளவுக்கு மோசமான நிலைமையை ஏற்படுத்தியவர்கள் பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்கு மதவாதிகளும் இனவாதிகளும் என்பதை மறுதலிக்க இயலாது.
இச்சுதந்திரத்தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும் என்றும், அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதலாகாது என்றும் உரிமைச் சாசனங்களும், நிபந்தனைகளும், நியதிகளும் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் வகுக்கப்பட்டிருந்தும் இந்நாட்டின் பெரும்பான்மை சமூகமான பௌத்த சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்கு மதவாதிகளும், இனவாதிகளும் மதவாதத்திற்கும், இனவாதத்திற்கும் முன்னுரிமை வழங்கி சர்வதேச யாப்புக்களையும், தேசிய அரசியல் சாசனங்களையும் அச்சாசனங்களினால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் சவால்களுக்கு உட்படுத்திஇ அச்சட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாது பெரும்பான்மையினர் என்ற மமதையில் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயற்படுவதானது சமூகங்களின் சகவாழ்வுக்கு மாத்திரமல்ல இந்நாட்டின் சட்டத்திற்கும், நிர்வாகச் செயற்பாடுகளுக்கும் எதிர்கால அபிவிருத்திக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடுவதோடு இந்நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்குத் தடையாகவும் சவாலாகவுமுள்ளதுடன் இலங்கையை சர்வதேசத்திடமும் இறுக்கியுள்ளது
குறிப்பாக கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை முஸ்லிம்களை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்கள் வாழப் பாதுகாப்பு அற்ற நாடுகள் வரிசையில் இலங்கையையும் உட்படுத்துவதற்கு காரணமாயிற்று. இனவாதிகளின் நடவடிக்கைகள் சர்வதேச நிறுவனங்கள் இலங்கை குறித்து அறிக்கைவிடுவதற்கும்இ சர்வதேசத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்வதற்கும் உந்துசக்தியாக அமைந்துவிட்டன.
இலங்கையானது, சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக் கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கி பயணிக்கும் என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் எச்சரிக்கைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், இந்நாட்டின் மீது சர்வதேசம் வைத்துள்ள கறுப்புப்புள்ளியை நீக்குவதற்காக இவ்வரசு முயற்சித்து வரும் வேளையில், பௌத்த சிங்கள கடும்போக்காளர்கள் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் எவ்விதத்திலும் இக்கறுப்புப்புள்ளியை அகற்ற வழிகோலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மீதுபற்றுள்ளவர்கள் இந்நாடு பல்துறையிலும் முன்னேற வேண்டும்இ சர்வதேசத்தில் நற்பெயரைப் பெற வேண்டுமென்றே சிந்திப்பர். ஆனால்இ இங்குள்ள பௌத்த சிங்கள பேரினவாத சக்திகள் நாட்டின் மீது பற்றுள்ளவர்களாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக்கொண்டு, சர்வதேசத்தின் பிடிக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கையின் நிலைமை குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளாது, தங்களை இயக்குகின்ற சக்திகளின் இலக்குகளை வெற்றிகொள்ளச் செய்வதற்காகச் செயற்பட்டுக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
கடந்த வருடம் கொழும்பில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் சென்ற நவம்பர் மாதம் கிந்தோட்டையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் என்பவற்றை காரணங்களாகக் குறிப்பிட்டு கடந்த 22ஆம் திகதி சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கையை பட்டியலிட்டிருப்பதானது இலங்கை மீது சர்வதேசம் வைத்துள்ள கறுப்புப் புள்ளியாகவே கருதவேண்டியுள்ளது.
அத்தோடு, கடந்த ஜனவரி மாதம் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் அச்சத்தில் உள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் கடந்த வருடம் யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி றீட்டா ஐசக்கை சந்தித்தவேளை, இலங்கை முஸ்லிம்களின் நிலைகண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு சர்வதேசம் கவலை கொள்ளும் அளவுக்கு பௌத்த சிங்கள பேரினவாதத்தால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலப்படுத்தப்படுகிறது. அத்துடன், இலங்கை மீது வைக்கப்பட்டுள்ள கறுப்புப்புள்ளியை அகற்றுவதற்குத் தடையாகவுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். சிறுபான்மை சமூகங்களை உணர்வு ரீதியாகவும் செயற்பாட்டு வடிவிலும் அச்சுறுத்துவதற்காக வெவ்வேறு பெயர்களில் பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் அமைப்புக்களும் அவர்களோடு இணைந்து செயற்படும் கடும்போக்காளர்களும்இ இனவாதிகளும் வெவ்வேறு போலிக்காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற தாக்குதல் சம்பவங்களின் வரிசையில் அம்பாறை, திகண ,தெல்தெனிய ,அகுரண உட்பட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 25ற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், கடைகள், வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பாரிய அழிவுகள் விளைவிக்கப்பட்டிருக்கின்றமையானது சர்வதேசத்தின் இலங்கை மீதான பார்வையை மேலும் வலுப்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேசத்தின் கண்காணிப்பும் செயற்பாடும் இலங்கைக்குள் எத்ததைய காத்திரமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது கேள்விக்குரியது.
2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாட்டை ஒரு நிலைக்குக் கொண்டுவருவதற்கு மக்கள் மூன்று சந்தர்ப்பங்களை வழங்கியிருந்தனர். முதலாவது சந்தர்ப்பம் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பின்னரான நிலைமையாகும்.
இதனால் நாட்டுக்கு பாரிய அழிவு ஏற்பட்டிருந்தாலும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர். அதன் பின்னர் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது. எனினும், தனது அதிகார மோகத்தினால் அதனை தவறவிட்டிருந்தார்.
2015ஆம் ஆண்டு மற்றுமொரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. மக்களால் வழங்கப்பட்ட ஆணையும் இந்த ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவில்லை. எமது நாட்டு மக்கள் 13 வருடங்களில் நாட்டை தேசிய ரீதியில் ஓரிடத்துக்குக் கொண்டுவந்து முன்னேற்றிச் செல்லுவதற்கான சந்தர்ப்பத்தை மூன்று தடவைகள் வழங்கியிருந்தார்கள். ஆனால் எத்தனை சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டாலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் கட்டுப்படுத்த தவறியமையே இந்த சந்தர்ப்பங்கள் நழுவிப்போக காரணமாகும் அப்படி இருக்கையில் சிறுபான்மையினர் மீதான அச்சமே வன்முறைகளுக்கு காரணம் எனக் கூறுவது வேடிக்கையானது. சட்டத்தின் ஆட்சி தராதரம் பாராது நிலைபெற்றால் இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை நோக்கிய ஆரம்பப்படியை எழுத்துவைக்க முடியும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.