ஞானசார தேரரின் கருத்துக்கள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் – திலங்க சுமதிபால
In ஆசிரியர் தெரிவு May 1, 2019 7:23 am GMT 0 Comments 2299 by : Dhackshala
அடிப்படைவாதிகள் குறித்து கலகொட அத்தே ஞானசார தேரர் போன்றோர் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் நாம் இனிமேல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2014ஆம் ஆண்டு கலகொட அத்தே ஞானசார தேரர், சில அமைப்புக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவர் கூறியவை இன்று உண்மையாகியுள்ளது. எனினும், அவர் அந்தக் கருத்துக்களை அன்றுக் கூறிய விதம், அவரின் நடவடிக்கை, பயன்படுத்தப்படும் வார்த்தை என்பது குறித்து விமர்சிக்கப்பட்டதே ஒழிய, அவரது கருத்து தொடர்பாக எவரும் கவனத்திற்கொள்ளவில்லை.
நாம் அவர் கூறிய கருத்துக்களை ஆராய வேண்டும். கடந்த காலங்களில் அடிப்படைவாதம் கூறிய கருத்துக்கள் குறித்து நாம் கவனத்தில் எடுக்கவில்லை. அத்தோடு, மேல்மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான அலவி மௌலானாவும் இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எனவே, இனிமேலாவது நாம் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். ஞானசார தேரர் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
அத்தோடு, கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஸ்தாபிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பிலும் தற்போது பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், இந்த பல்கலைக்கழகத்துக்கான அனுமதி கடந்த அரசாங்கத்தினாலே வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால்தான் இதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகமானது, இலங்கை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் மேம்பார்வையுடனே ஸ்தாபிக்கப்படுகின்றது. ஆகவே, இந்த விடயம் குறித்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.