டிசம்பரில் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்: தடுப்பூசி அமைப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென தனியார் பங்களிப்புடன் கூடிய அமெரிக்க கொரோனா தடுப்பூசி அமைப்பான ஒபரேஷன் வார்ப் ஸ்பீட் (Operation Warp Speed) தெரிவித்துள்ளது.
ஒபரேஷன் வார்ப் ஸ்பீட் அமைப்பின் தலைமை அறிவியல் ஆலோசகர் மோன்செப் சுலோய், வெள்ளை மாளிகை ஊடக சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு, ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டரை கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் உருவாக்கி உள்ள இரண்டு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கான அவசரகால அனுமதி அடுத்த மாதம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்கர்களுக்கும் கிடைக்கும் என கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.